Published : 21 Jul 2023 06:11 AM
Last Updated : 21 Jul 2023 06:11 AM

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அடிமை இந்தியாவை உருவாக்கும்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அடிமை இந்தியாவை உருவாக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ‘மேக் இன் இந்தியா’ என்ற கோஷத்தை பரப்பினார். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் அடைந்த வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் மட்டும்தான் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள், ரயில் என்ஜின், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏராளமான விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை எல்லாம் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார்.

உலகில் இந்திய ரயில்வே 2-வது மிகப்பெரிய ரயில்வே ஆகும். ஆனால், இன்றைக்கு ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லிவிட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவுக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.

ஒரு ரயிலின் விலை ரூ.120 கோடி. இதை ஏன் இந்தியாவிலேயே தயாரிக்கக்கூடாது? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார்.

உள்நாட்டில் முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்தால்தான் ஒரு நாடு வல்லரசாக முடியும். தேவையான உதிரிபாகங்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அல்லது தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கு உதவும். மோடி செய்வது அடிமை இந்தியாவைத்தான் உரு வாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x