Published : 21 Nov 2017 10:49 AM
Last Updated : 21 Nov 2017 10:49 AM

எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல: தீபிகாவுக்கு கமல் ஆதரவுக் குரல்

பத்மாவதி பட சர்ச்சை தொடர்பாக நடிகை தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல்கள் வலுத்துவரும் நிலையில், ''எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல" என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இந்தத் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது.

வரலாற்றைத் திரித்துக் கூறியிருப்பதாக ரஜபுத்திரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், திரைப்பட வெளியீடு தடைபட்டுள்ளது. இதற்கிடையில், பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

உச்சபட்சமாக, அவரது தலைக்கு ரூ.10 கோடி அறிவித்தார் ஹரியாணா பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளர்.

இதைச் சுட்டிக்காட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில், நடிகை தீபிகா படுகோனுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்கிறார்கள்.. அவரது உடலைவிட தலைக்கு அதிக மதிப்பளியுங்கள். அதைவிடவும் அதிகமாக அவரது சுதந்திரத்தை மதியுங்கள். தீபிகாவின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்காதீர்கள்.

எனது திரைப்படங்களை பல சமுதாயத்தினர் எதிர்த்துள்ளனர். எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல.

புத்தியுள்ள இந்திய தேசமே.. விழித்தெழு. இது சிந்தனைக்கான தருணம். நாம் பலமுறை சொல்லிவிட்டோம். கேளாய்.. இந்திய தாயே" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x