வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான சமரச பேச்சுவார்த்தை புறக்கணிப்பு: போக்குவரத்து கழக நிர்வாகம் மீது தொழிற்சங்கத்தினர் அதிருப்தி

வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான சமரச பேச்சுவார்த்தை புறக்கணிப்பு: போக்குவரத்து கழக நிர்வாகம் மீது தொழிற்சங்கத்தினர் அதிருப்தி
Updated on
1 min read

சென்னை: வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான சமரச பேச்சுவார்த்தையை போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் புறக்கணித்ததால் தொழிற்சங்கத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்தஅடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிராக சிஐடியுவேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது.

இது தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக, சென்னையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நேற்று சிஐடியு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்சம் மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர்சசிகுமார், துணை பொதுச் செயலாளர்கள், எம்.கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், எம்எல்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட 8 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த 5 கூட்டங்களிலும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் தரப்பில் மேலாண் இயக்குநர்கள் பங்கேற்கவேண்டும் என தொழிலாளர் நலத்துறை தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், மேலாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் இந்த முறை போக்குவரத்துக் கழகங்கள் பேச்சுவார்த்தையை முற்றிலும் புறக்கணித்தன. இது தொழிற்சங்கங்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தொழிலாளர் ஆணையர் நேரடியாக தலையிட வலியுறுத்தி,அவரிடம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடிதம் அளித்தனர்.அந்த கடிதத்தில், ``இது தொழில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். எனவே, ஆணையர் நேரடியாக தலையிட்டு விதிமீறும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல்ஆனந்த், போக்குவரத்துக் கழக நிர்வாகங்களிடம் பேசி, சமரச பேச்சுவார்த்தையை முறையாக நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in