Published : 22 Nov 2017 09:23 AM
Last Updated : 22 Nov 2017 09:23 AM
சேலத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி பெறுவதற்காக உண்மையை மறைத்து மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பில் நவ.19-ல் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி அசோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் தொடக்க விழாவைத்தான் நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர்’ என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த மனு உண்மைக்கு புறம்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மக்கள் பாதை அமைப்பு சார்பில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
அதில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இந்த பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் தற்கொலை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பொதுமக்களை போராட்டத்துக்கு அழைக்கும் விதமாக சிறப்புரை நிகழ்த்தவிருப்பதாக இருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி, ‘இந்த துண்டு பிரசுரங்களில் ஒரு இடத்தில் கூட ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம் என்ற வார்த்தை இல்லை. உண்மையை மறைத்து நீதிமன்றத்தை ஏமாற்றும் நோக்கத்தில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.
ஆனால் இதை ஏன் மனுதாரர் மறைத்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அத்துடன் மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT