Published : 09 Nov 2017 06:39 PM
Last Updated : 09 Nov 2017 06:39 PM

சென்னையில் ஞாயிறு இரவு முதல் மீண்டும் அதிக மழை: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சென்னையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார். காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி வரும் சாத்தியக்கூறுகளே அதிகம் இருப்பதால் வரும் ஞாயிறு முதல் மீண்டும் மழை தொடங்கும்.  4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பதிவில் இருந்து:

''ராமேஸ்வரம் கடற் பகுதியில் இருந்து சென்னை கடற்பகுதி வரை தரைக்காற்று பலமாக வீசுகிறது. இதனால், இன்றும், நாளையும் சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா, ராமநாதபுரம் பகுதிகளில் சனிக்கிழமை முதல் நல்ல மழை இருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து சென்னையில் மீண்டும் மழை விளையாடத் தொடங்கும்.

வங்காள விரிகுடா கடலில் 'டாம்ரே' என்ற எந்த புயலும் உருவாகவில்லை. அவ்வாறு வரும் செய்திகளையும், வதந்திகளையும் நம்பாதீர்கள். அங்கு உருவாகி இருப்பது சாதாரண குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மட்டுமே. இதனால், சென்னையில், ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

மற்றவகையில் குறிப்பிடத்தகுந்த அளவில் பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஆதலால், அடுத்து வரும் சாரலை அனுபவியுங்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எப்படி உருமாறுகிறது? அல்லது எப்படி நகர்கிறது? என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட மழை இருக்கும்.

களத்தில் இறங்கி மழை விளையாடுவது என்பது உண்மையாக ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு அல்லது திங்கட்கிழமை காலையில் இருந்துதான் தொடங்கும். ஒட்டுமொத்த வட தமிழகம் முழுமையும் 4 நாட்களுக்கு மழை இருக்கும்.

வடதமிழகத்தில் சிறப்பான மழைப்பொழிவு என்பது வரும் 12-ந்தேதி முதல் தொடங்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மூலம் மேகக்கூட்டங்கள் தமிழக கடற்கரைப்பகுதியில் உருவாகி மழைப்பொழிவைத் தரும்.

வடதமிழக கடற்கரைப்பகுதியான டெல்டா முதல் சென்னை வரை பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை இருக்கும். காற்று அடிக்கும் திசை, சுழற்சி உயர்வாக இருப்பதால், சிலநேரங்களில் கனமழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கப் போகிறது. சென்னையில் மழை சிறப்பாகப் பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதன் சூழலும் மழைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.

பாம்பன் முதல் சென்னை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வடமேற்கில் இருந்து காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் காற்றின் வேகத்தால் திடீரென சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

ஆதலால், காற்றின் வேகத்தை அறிந்து , எச்சரிக்கையுடன் செல்லவும். சென்னை முதல் ராமேஸ்வரம் கடற்கரை வரை அடுத்த 4 நாட்களுக்கு கூடுதலான காற்றுவீசக்கூடும்.

பாம்பன் பகுதியில் அதிகமான காற்றை எதிர்பார்க்கலாம். ஆதலால், பாம்பன் பாலத்தை மெதுவாக கடக்கவும்''.

இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x