Published : 18 Jul 2023 04:22 AM
Last Updated : 18 Jul 2023 04:22 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்: குணமானதும் கைதி அறைக்கு செல்வார்

சென்னை: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கடந்த 21-ம் தேதி இதய அறுவை சிகிச்சை நடந்தது. அவரது நீதிமன்ற காவல் வரும் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த ஜெ.நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகிய 2 நீதிபதிகள் கடந்த 4-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

‘‘தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இன்னும் அதிகபட்சம் 10 நாட்கள் வரை தங்கி சிகிச்சை பெறலாம். அதன்பிறகு, சிறை அல்லது, சிறைத் துறை மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்’ என்று நீதிபதி பரதசக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

பின்னர், 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை கடந்த 14-ம் தேதி விசாரித்து, ‘செந்தில் பாலாஜியை கைது செய்தது, நீதிமன்ற காவலில் வைத்தது சட்டப்பூர்வமானது’ என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி பரத சக்ரவர்த்தி அளித்த 10 நாள் அவகாசம் முடிவடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காவல் துறை வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் மாலை 5.30 மணி அளவில் புழல் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு திரண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட திமுகவினர், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

செந்தில் பாலாஜியை சிறைத் துறை மருத்துவர்கள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவரை மருத்துவர்கள் குழு சில நாட்கள் கண்காணிக்க உள்ளனர். உடல்நலம் சற்று தேறிய பிறகு, விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்பட உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x