Published : 14 Nov 2017 03:00 PM
Last Updated : 14 Nov 2017 03:00 PM
திண்டிவனம் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக வேட்பாளர் சீத்தாபதி, அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவின்போது திண்டிவனம் 21வது வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் குறைபாடு உள்ளதாக, அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன், ஆணைய அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
ஆனால் டெல்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் பேசிய பிறகு மறு வாக்குப்பதிவு இல்லை என்று தெரிவித்து, வாக்குகள் எண்ணப்பட்டு திமுக வேட்பாளர் சீத்தாபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
61,879 வாக்குகள் பெற்ற திமுக சீத்தாபதி, 61,778 வாக்குகள் பெற்ற எஸ்.பி.ராஜேந்திரனை விட 101 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் திமுக வேட்பாளர் சீத்தாபதி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் எஸ்.பி ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் நிலுவையில் உள்ள நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதி ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT