Published : 17 Jul 2023 04:19 PM
Last Updated : 17 Jul 2023 04:19 PM

மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் 11-வது முறையாக குட்கா முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணை நடத்துவது தொடர்பான மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிபிஐ கூறியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் குட்கா வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது சிபிஐ விசாரணை நடத்தலாம் என மத்திய அரசும் விசாரணைக்கு அனுமதி அளித்திருந்தது.

அந்தக் கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விவரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் தொடர்பான விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப் பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது சிபிஐ தரப்பில், மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறி, கடந்த 2022 டிசம்பர் 15ம் தேதி முதல் 2023 ஜூலை 17 இன்று வரை 11 முறை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 15, 2023 ஜன.10, பிப்.6, பிப்.17, மார்ச் 20, ஏப்.18, ஏப்.25, மே 11 ஜூன் 3, ஜூன் 26 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ கூறியதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x