Published : 30 Nov 2017 05:23 PM
Last Updated : 30 Nov 2017 05:23 PM

முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் அன்புச்செழியன்

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச்செழியன் தலைமறைவாக இருக்கிறார். போலீஸார் கைது செய்யாமல் இருக்க தனக்கு முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திடீரென தனது முன் ஜாமீன் மனுவை அன்புச்செழியன் வாபஸ் பெற்றுள்ளார்.

நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸாரின் கைதுக்கு அஞ்சி அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செழியன் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவில், சினிமா துறையில் 30 வருடங்களாக நற்பெயருடன் இருக்கும் தான், வட்டிக்கு வட்டி வசூலிப்பதில்லை என்றும், அசோக்குமார் மரணத்துக்கு காரணமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

'தாரை தப்பட்டை' படத்துக்காக வாங்கிய கடனை அடைப்பதிலிருந்து தப்பிப்பதற்காகவே இந்த குற்றச்சாட்டை சசிகுமார் தன் மீது சுமத்தியுள்ளதாகவும், அசோக்குமாரின் தற்கொலை கடிதம் இயற்கையானதாக தெரியவில்லை என்றும், சினிமாத்தனமாக இருப்பதாகவும் அன்புச்செழியன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி என். ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தால் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகும் நிலை இருந்தது. இந்நிலையில் அன்புச்செழியன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டு முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x