Published : 21 Nov 2017 10:34 AM
Last Updated : 21 Nov 2017 10:34 AM

சென்னையில் நடந்த 563 டாக்டர்களுக்கான நேர்முகத்தேர்வு கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடந்து முடிந்த 563 டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு கலந்தாய்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 563 டாக்டர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு கலந்தாய்வு சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல மையத்தில் கடந்த 17, 18 தேதிகளில் நடைபெற்றது. மருத்துவப் பட்ட மேற்படிப்பு முடித்த டாக்டர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலந்தாய்வை ரத்து செய்யக் கோரியும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். அதனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட வில்லை.

இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஎம்இ எட்வின் ஜோ ஆகியோரை சந்தித்தனர்.

கோரிக்கைகள்

அப்போது, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நடந்த 563 டாக்டர்களுக்கான நேர்முகத் தேர்வு கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். முதலில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு படிக்கும் டாக்டர்களுக்கு நேர்முகத் தேர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். அதன் பின்னர் மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக டாக்டர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனால் மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x