Published : 15 Jul 2023 05:09 AM
Last Updated : 15 Jul 2023 05:09 AM

சிதம்பரம் கனகசபை விவகாரம் | 3-வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? - மனுதாரருக்கு தலைமை நீதிபதி கேள்வி

சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தீட்சிதர்கள் யாரும் வழக்கு தொடராத நிலையில் மூன்றாவது நபர் எப்படி வழக்கு தொடர முடியும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி,வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் சந்நிதி கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு மே 17-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில் பக்தர்களை அங்கிருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகளில் பாதிப்புஏற்படுகிறது, தமிழக அரசின் அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது. கோயிலின் வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால் அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, ‘‘தமிழக அரசின் அரசாணை, தீட்சிதர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் உள்ளது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி, ‘‘இந்த வழக்கில் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில், மூன்றாவது நபரான மனுதாரர்எப்படி இந்த வழக்கை தொடரமுடியும்’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில்,பக்தர்கள் யார் வேண்டுமென்றாலும் இதுதொடர்பாக வழக்கு தொடரலாம் என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x