Last Updated : 10 Jul, 2023 11:03 PM

38  

Published : 10 Jul 2023 11:03 PM
Last Updated : 10 Jul 2023 11:03 PM

ஆளுநருக்கு மரியாதை இல்லாத சூழலை திமுக உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: தமிழக ஆளுநருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக உருவாக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 10) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர்தான் காரணம் என்பதுபோல் அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது?. திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது?. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கிறார் முதல்வர். ஆளுநர், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று முதல்வர் சொல்கிறார். அதே வேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்?. அதற்கு பதில் இல்லை. தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்டுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?.

கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்போது எதற்காக ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது. ஆளுநருக்கு மரியாதையே இல்லாத சூழலை திமுக உருவாக்கியுள்ளது. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. அவர்கள் கொடுத்ததில் எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கிறார்.

முதல்வர் அனுப்பிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தமிழகத்தின் உண்மையான நிலைமையை பிரதிபலிப்பதாக அந்த கடிதம் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் முதல்வரிடத்தில் தெரிகிறது. முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமைதான் வெளிப்படுகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x