Published : 10 Jul 2023 05:47 AM
Last Updated : 10 Jul 2023 05:47 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: ஜூலை 12, 13-ல் நீலகிரி, கோவையில் கனமழை

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12, 13-ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 10) சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11, 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, வரும் 12, 13-ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூலை 9-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 6 செ.மீ.,கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., விழுப்புரம், வானூர், நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வரும் 12-ம் தேதி வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வரும் 13-ம் தேதி வடதமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

வரும் 13-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x