Published : 03 Jul 2023 02:52 PM
Last Updated : 03 Jul 2023 02:52 PM

குழந்தையின் வலது கை அகற்றம் | “தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால் கடும் நடவடிக்கை எடுப்பீர்” - அண்ணாமலை

சென்னை: "அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது எதேச்சையானதா, அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா என்ற சந்தேகம் எழுகிறது" என்று ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, வலது கை முட்டு வரை பாதிக்கப்பட்டு, வலது கையை வெட்டி அகற்றியிருக்கின்றனர். குழந்தைக்குக் கொடுத்த தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 17 வயதே ஆன கால்பந்து வீராங்கனை பிரியா, அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்துக்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் அரசு மருத்துவமனைகள், தொடர்ந்து இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது ஏற்புடையதல்ல.

அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது, எதேச்சையானதா அல்லது பொதுமக்களிடையே அரசு மருத்துவமனைகள் குறித்து நம்பிக்கையின்மையை விதைப்பதற்கா? என்ற சந்தேகம் எழுகிறது.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

குழந்தையின் கை அகற்றம்: முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமதுமகிர். தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு ட்ரீப்ஸ் போடப்பட்ட வலது கை கறுப்பாக மாறியதுடன், அழுகத் தொடங்கியது. இதையடுத்து, குழந்தையின் கையை அகற்ற வேண்டுமெனத் தெரிவித்த மருத்துவர்கள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் குழந்தையை அனுப்பிவைத்தனர்.

அங்கு 2 மணி நேர அறுவைசிகிச்சைக்குப் பின்னர், குழந்தையின் வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டது. இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணமென்று பெற்றோர் குற்றம்சாட்டினர்.

மருத்துவமனை விளக்கம்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அளித்த விளக்கத்தில், ``குழந்தையின் மூளைக்கு அருகேயுள்ள வென்ட்ரிகுலர் அறையில் திரவம் கோர்த்திருந்தது. அதை சரிசெய்ய `ஷண்ட்' உப கரணம் பொருத்தப்பட்டது. அந்த உபகரணம், அதன் நிலையிலிருந்து மாறியதால், அதை மாற்றி அமைக்க, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

மேலும், ஊட்டச்சத்து, வளர்ச்சிகுறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இருந்தன. சிகிச்சைக்குப் பின்னர், ரத்த நாளங்களில் ஏற்பட்டஉறைவுப் பாதிப்புக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்என்பதால், ரத்த ஓட்டம் நின்றுபோன வலது கையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை என்ன? - இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ``அந்தக் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததால், பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. குழந்தைக்கு தவறுதலாக ஊசி போடப்பட்டதா என்று 3 அலுவலர்கள் விசாரிக்கின்றனர். கவனக் குறைவால் இந்த சம்பவம் நடந்தி ருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x