Published : 28 Jun 2023 11:30 AM
Last Updated : 28 Jun 2023 11:30 AM

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் 

தக்காளி

சென்னை: பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி விற்பனையை இன்று (28.06.2023) கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டுக்கு 800 டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வரின் அறிவுறுத்தலின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பீடுகையில் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவானதாகும்.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை, இராஜாஅண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மா உணவத்துக்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள 35,000 மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x