Published : 26 Jun 2023 05:54 PM
Last Updated : 26 Jun 2023 05:54 PM

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியும், ஆளுநர் நிலைப்பாடும்: சென்னை ஐகோர்ட் கருத்து

அமைச்சர் செந்தில்பாலாஜி | கோப்புப்படம்

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ள ஆளுநர், அமைச்சரை நீக்க வேண்டும் என எங்கே சொல்லியிருக்கிறார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி கோரி முதல்வர், ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் - ஆளுநருக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து ரகசியமானது. எனவே, அந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க இயலாது எனக் கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பத்திரிகை செய்திக் குறிப்பில் முதல்வர் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஆளுநர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்? ஆளுநர் கருத்துக்கு என்ன மதிப்பு உள்ளது? கடந்த மே மாதமே, செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர், முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது ஆளுநர் - முதல்வர் இடையேயான கடிதப் போக்குவரத்துக்களை சமர்ப்பிக்க ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை ஆளுநர் ஏற்கவில்லை என்பதற்கும், அவரை நீக்க உத்தரவிட்டார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், பத்திரிகை செய்தி அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆளுநர் தரப்பில் இருந்து உத்தரவு எதுவும் இல்லாமல் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை கேள்வி எழுப்ப முடியாது. அந்த உத்தரவை சமர்ப்பிக்கும்படி ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிடவும் முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்கையும் இத்துடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வழக்குகளையும் சேர்த்து ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x