Last Updated : 25 Jun, 2023 06:18 AM

 

Published : 25 Jun 2023 06:18 AM
Last Updated : 25 Jun 2023 06:18 AM

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - மறுபரிசீலனை செய்ய ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறந்தது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்குவதற்கு தேவையான ஊட்டச்சத்து, அடிப்படைக் கல்வி, ஆரோக்கியமாக வளர்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள 1975-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎஸ்) மூலம் மத்திய அரசு அங்கன்வாடி மையங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இம்மையங்கள் மூலம் நாப்கின், சத்துமாவு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைகள், வளர் இளம்பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இம்மையங்களை குறைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனவும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழகத்தில் மொத்தம் சுமார் 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், குறைந்த தொலைவில் உள்ள 2 மையங்களை ஒன்றிணைப்பது, 10 குழந்தைகளுக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மையங்களை மூடுவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘மினி மையங்கள்’: இதற்கு பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி ‘குழந்தைகள் வருவதில்லை’ என்று கடிதம் பெறப்பட்டு மூடப்பட்டு வருகிறது. மேலும், 10 முதல் 15 குழந்தைகள் உள்ள மையங்கள் மினி மையங்களாக்கப்படுகின்றன. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மையங்கள் மூடப்படும் நிலை உள்ளது.

மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை ஏற்கெனவே பலமுறை சந்தித்து வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போது அங்கன்வாடி மையங்களை குறைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சத்தான உணவு கிடைக்காமலும், அடிப்படைக் கல்வி கிடைக்காமலும் கிராமப்புற குழந்தைகள் பாதிக்கப்படுவர். மேலும், அங்கன்வாடிகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், ஊட்டச்சத்து மாவு வழங்குதல் ஆகியவையும் பாதிக்கப்படும். எனவே, மையங்கள் குறைப்பு நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திட்ட அலுவலர் விளக்கம்: இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டபோது அவர் கூறியது: தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, குழந்தைகள் இல்லாத நிலையில் உள்ள மையங்கள், அருகே உள்ள மையத்துடன் இணைக்கப்படுகின்றன. எண்ணிக்கையில் குறைவான குழந்தைகளுடன் செயல்படும் மையங்கள் மினி மையங்களாக மாற்றப்படுகின்றன.

15 குழந்தைகளுக்கு மேல் உள்ள மையங்களில் 2 அங்கன்வாடி பணியாளர்களும், குறைவாக உள்ள மையங்களில் ஒரு பணியாளரும் பணிபுரிவர். இவை அனைத்துமே நேரில் சென்று ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x