Published : 24 Jun 2023 05:36 PM
Last Updated : 24 Jun 2023 05:36 PM

அடையாறு தொல்காப்பிய பூங்காவில் ரூ.20 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் விரைவில் தொடக்கம்

தொல்காப்பிய பூங்கா

சென்னை: சென்னை - அடையாறு தொல்காப்பிய பூங்கா மறு சீரமைப்பு பணிகள் ரூ.20 கோடி செலவில் விரைவில் தொடங்க உள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007-ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011-ம் ஆண்டில் அதைத் திறந்துவைத்தார். பின்னர் வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என பெயர் மாற்றம் செய்தது. அங்கு தொல்காப்பிய பூங்கா என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, நகராட்சி நிர்வாத் துறை அமைச்சர் கே.என்.நேரு இப்பூங்காவை பார்வையிட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இப்பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டது. அந்தப் பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ.20 கோடியில் தொல்காப்பிய பூங்காவை மறு சீரமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பூங்காவின் நடைபாதை, பூங்கா முகப்பு சீரமைப்பு, பார்வையாளர்கள் இடம், குழந்தைகள் உரையாடும் இடம், பார்வையிடும் இடம், பார்வையாளர்கள் கோபுரம், கண்காட்சி பகுதி என்று மொத்தம் 23 வரை மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கும் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x