Published : 23 Jun 2023 07:35 PM
Last Updated : 23 Jun 2023 07:35 PM

“பாட்னா கூட்டத்தில் நான் முன்வைத்த தேர்தல் யோசனைகள்...” - முதல்வர் ஸ்டாலின் பகிர்வு

சென்னை: "பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும், ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவிலே ஏற்பட்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்து சென்னை விமான நிலையம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர் கூறியது: "இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் பிஹாரின் தலைநகரான பாட்னாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக நானும் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் சென்றிருந்தோம். மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்குவதாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது.

அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் நான் சந்தித்தேன். குறிப்பாக வியாழக்கிழமை மாலை நான் பாட்னா சென்றவுடன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக லாலு பிரசாத் யாதவை இல்லத்துக்குச் சென்று, அவருடைய உடல்நிலை விசாரித்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அது எனக்கு பெரிய உற்சாகத்தை தந்தது.ஒன்றிய அளவில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை வீழ்த்துவது என்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தக் கூட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூட்டியிருந்தார். பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டமாக மட்டும் இதனை யாரும் நினைக்க வேண்டாம்.

இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத்தெளிவாக இருக்கிறோம். இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நான் இன்று காலை பேசுகிறது போது நான் குறிப்பிட்டு சொன்னேன்.

2023 ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள். 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் நான் அழுத்தம்திருத்தமாக பேசினேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழகத்தில் அடைந்த அனைத்து வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. அதேபோல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தி வற்புறுத்தி எடுத்துச் சொன்னேன்.

சில முக்கியமான ஆலோசனைகளையும் நான் அந்த கூட்டத்திலே வழங்கினேன். உதாரணமாக எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும், என்று வரிசையாக நான் அந்தக் கூட்டத்திலே பேசுகின்ற போது வலியுறுத்தி சொல்லி இருக்கிறேன்.

பாஜகவை வீழ்த்துவதை அனைத்துத் தலைவர்களும் ஒற்றை இலக்காகக் கொண்டு இருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவில் ஏற்பட்டு இருக்கிறது. ஒற்றுமையே வெற்றிக்கு அடிப்படை. நிச்சயமாக அகில இந்திய அளவில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இப்போதுதான் கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அடுத்தடுத்த நடவடிக்கைகளை பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.பாட்னாவில் கூடினோம்.
மகிழ்ச்சியாகத் திரும்பினோம்" என்று அவர் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய, இந்த கூட்டம் நடந்து முடிந்தபின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அதில் ஏதாவது காரணம் இருக்கிறதா? கேள்விக்கு பதிலளித்த அவர், " நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்குப்பிறகு எனக்கு விமான நிலையம் செல்ல நேரமாகிவிட்டது. மதிய உணவுக்கு பிறகுதான் செய்தியாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதனால் மதிய உணவு கூட சாப்பிட முடியாமல், விமானத்தில் தான் சாப்பிட்டேன். அவர்களிடம் சொல்லிவிட்டுதான் வந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. அதுதான் உண்மை" என்றார்.

அப்போது, ஆத் ஆத்மி கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். டெல்லி Ordinance தொடர்பாக காங்கிரஸ் கட்சி அவர்களது நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "நீங்கள் அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.

இரண்டாம் கட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள். முதற்கட்ட கூட்டத்தில் முழுமையாக எதுவும் எட்டப்படவில்லையா? எதற்காக இரண்டாவது கூட்டம்? என்ற கேள்விக்கு, "முதல் கூட்டத்தில் கூடினோம். என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்திருக்கிறோம். போகப்போக அடுத்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை தெரிவிக்கிறோம்" என்று முதல்வர் பதிலளித்தார்.

அப்போது பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த முதல்வர், "அது இன்னும் முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லோரும் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால். பிரதமர் வேட்பாளர் யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது" என்றார்.

முன்னதாக, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | வாசிக்க > பாஜக அரசை வீழ்த்த 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்: பாட்னா கூட்டத்துக்குப் பின் நிதிஷ் அறிவிப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x