Published : 21 Jun 2023 08:26 PM
Last Updated : 21 Jun 2023 08:26 PM

உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்காவை மாற்ற திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கோப்புப்படம்

சென்னை: செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் உலகத் தரத்துக்கு மேம்படுத்த உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், 'தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க கடந்த 1989-ம் ஆண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில், அங்கு குத்தகை அடிப்படையில் செயல்பட்ட தனியார் டிரைவ்-இன் உணவு விடுதி வசம் இருந்த 20 ஏக்கர் நிலத்தை மீட்ட தமிழக அரசு, அந்த இடத்தில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கியது. ஆனால் அதன்பிறகு செம்மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான 114 கிரவுண்ட் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி கிருஷ்ணமூர்த்தி கடந்த 2011ம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அண்ணா மேம்பாலம் அருகே அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தனியார் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை கடந்தாண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் வருவாய்த் துறை அந்த இடத்தை கையகப்படுத்தி தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைத்துவிட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி ராஜகோபால், "விதிகளை மீறி கையகப்படுத்தியுள்ளனர். சங்கத்தின் பெயரில் நடத்தப்பட்டுள்ளதுதானே தவிர மனுதாரர் ஆக்கிரமிப்பாளர் கிடையாது. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து இடத்தை கையகப்படுத்தியுள்ளனர். எனவே, இடத்தை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. மேலும், மனுதாரர் அந்த இடத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். அந்த இடத்தில் விளம்பரம் பலகைகள் வைத்து வாடகை வசூலித்து தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தி உள்ளனர்.

அவர்களுக்குத்தான் உரிமை உள்ளது என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு கையகபடுத்தப்பட்டுள்ளது. இடத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே அரசு இந்த இடத்தை கையகப்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போலவும், துபாயில் உள்ள மிராகில் பூங்கா போலவும் உலகத்தரத்துக்கு அரசு மேம்படுத்த உள்ளது" என்று வாதிட்டார்.

இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரரான புவனேஷ்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, "இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துதான் இந்த இடத்தை கையகப்படுத்தி உள்ளது. இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. பொதுமக்களின் நலனுக்காகவே இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த இடம் வர உள்ளது" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x