Published : 11 Oct 2017 06:10 AM
Last Updated : 11 Oct 2017 06:10 AM

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 26.15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.757 கோடி உதவித்தொகை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

கடந்த 6 ஆண்டுகளில் தொழிலாளர் நலவாரியங்களைச் சேர்ந்த 26 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.757 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் நிலோபர் கபீல் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நிலோபர் கபீல் பேசியதாவது:

பணியாளர்கள் இழப்பீட்டுச் சட்டம், பணிக்கொடைச் சட்டம், பிழைப்பூதியச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் அளிக்கும் சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமுறை எடையளவு சட்டத்தை அமல்படுத்தும் அலுவலர்கள், பொது விநியோகத்திட்ட பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பொட்டலப் பொருட்களில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு கூடுதலாக பொட்டலப் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 17 அமைப்புசாரா நலவாரியங்களின் பதிவு, புதுப்பித்தல், நல உதவி கோரும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, நலத்திட்ட உதவிகள் உரிய காலத்தில் பயனாளிகளுக்கு சென்றடையச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 18 லட்சத்து 4 ஆயிரத்து 511 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு, 26 லட்சத்து 15 ஆயிரத்து 159 பயனாளிகளுக்கு ரூ.757 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில்,தொழிலாளர் நல ஆணையர் க.பாலச்சந்திரன் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x