Last Updated : 19 Jun, 2023 05:43 PM

 

Published : 19 Jun 2023 05:43 PM
Last Updated : 19 Jun 2023 05:43 PM

கடலூரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 4 பேர் பலி; காயம் 96 - விபத்து நேரிட்டது எதனால்?

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் திங்கள்கிழமை தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 96 பேர் காயமடைந்த நிலையில், கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

திருவண்ணாமலையில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் கடலூர் - பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது. இவ்விரு பேருந்துகளும் பண்ருட்டியை அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்புற டயர் வெடித்து, கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

அப்போது பயங்கர சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் விபத்து நடைபெற்ற இடத்துக்கு சென்றபோது, இரு பேருந்தில் பயணித்த பயணிகளும் அழுகுரலுடன் காயங்களுடன் பலர் கிடந்தனர். இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம்பட்டவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நெல்லிக்குப்பம் போலீஸார் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரது உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து உயிரிழந்தர்கள் குறித்து விசாரித்தபோது, இதில் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் அங்காளமணி (33), பண்ருட்டி சேமக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன் (49), திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த முருகன் (50), கவரப்பட்டைச் சேர்ந்த தனபால் (50) ஆகிய 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் 7 பேர் பலத்தக் காயமடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனைக்கும், ஒரு சிறுவன் உள்பட 96 பேர் லேசான காயங்களுடன் புதுச்சேரி மற்றும் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருவண்ணாமலையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநரை மீட்க முடியாத நிலை உருவானபோது, அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்த பண்ருட்டி போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். காலை 10 மணிக்கு நடந்த விபத்தின் மீட்பு பணிகள் 12 மணியளவில் முடிந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் எம்எல்ஏ ஐயப்பன், பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அ.அரூண் தம்புராஜ்,எஸ்பி ரா.ராஜாராம் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதையடுத்து அங்கு வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெரும் எண்ணிக்கையில் பயணிகள் காயமடைந்ததது ஏன்? - பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து, காலை 8 முதல் 11 மணி வரை கடலூருக்கான அரசு பேருந்து சேவை மிகக் குறைவு. அதே நேரத்தில் தனியார் பேருந்துகள் மட்டுமே 8 முதல் 11 மணி இயக்கப்படுவதால், தனியார் பேருந்து ஊழியர்கள் வருமானத்தைக் கணக்கில் கொண்டு அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு, மிகுந்த பாட்டுச் சத்தத்துடன் அதிகவேகமாக கடலூர் சாலையில் பயணிப்பது வழக்கமாக உள்ளது. மேலும் நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், தனியார் பேருந்து ஊழியர்கள் கல்லூரி மாணவ,மாணவியரின் அதிக அளவில் ஏற்றிக் கொண்டு வேகமாக செல்வதும் விபத்துக்கு காரணம் என்கின்றனர் போக்குவரத்து போலீஸார்.

இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விசாரித்தால், ஏற்கெனவே வாகன எரிபொருள் உயர்வு காரணமாக அவர்கள் கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றால் தான் நஷ்டமில்லாமல் பேருந்தை இயக்கமுடியும் என்கிறார்கள். அவர்கள் பக்க நியாயத்தையும் உணரவேண்டியிருப்பதால், அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x