Published : 22 Oct 2017 11:31 AM
Last Updated : 22 Oct 2017 11:31 AM

மு.க.ஸ்டாலினின் எழுச்சி பயணத்தில் மம்தா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை பங்கேற்க வைக்க திட்டம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள எழுச்சி பயணத்தின்போது நடக்கும் பொதுக்கூட்டங்களில் மம்தா பானர்ஜி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ‘நமக்கு நாமே’ என்ற பயணத்தை மேற்கொண்டேன். அதேபோல, விரைவில் எழுச்சிப் பயணம் செல்ல உள்ளேன்’’ என்றார்.

இதையடுத்து, மு.க.ஸ்டாலினின் எழுச்சிப் பயணம் குறித்து மாவட்டந்தோறும் திமுகவினர் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் உள்ளூர் நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனையும் நடத்தவுள்ளனர். இது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நவம்பர் 7 முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டாலின் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். நடைபயணம், பொதுக்கூட்டம், பொதுமக்களுடன் கலந்துரையாடல், விவசாயிகள், தொழில் முனைவோர் சந்திப்பு உள்ளிட்டவை இதில் இடம்பெறும்.

இந்த அரசால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உரிமைகள் இழப்பு, ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் ஸ்டாலின் விரிவாக பேசுவார். 3 நாட்களில் 8 மாவட்டங்களில் பயணம் செய்வது என்றும் அதில் 4 இடங்களை தேர்வு செய்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் பயணம் செய்கிறாரோ அந்த மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள அரசு திட்டங்கள், அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் முடங்கியுள்ள பணிகள், டெங்கு பாதிப்பு குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற நிலையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் இருக்கும்.

மேலும், மாவட்டங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர்டி.ராஜா போன்ற தேசிய தலைவர்களும் பேசவுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x