Published : 08 Oct 2017 12:28 PM
Last Updated : 08 Oct 2017 12:28 PM

அதிமுக அரசு அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமை சக்திகளுடன் களம் காணும்: ஸ்டாலின் எச்சரிக்கை

அதிமுக இனியும் அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமை சக்திகளுடன் களம் காணும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூக நீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தமிழ் மறையாம் திருக்குறள் கூறும் சிறப்பு வாக்கு. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பேதப்படுத்தி, உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் இழிநிலை அகற்றப்பட்டு, சமூக நீதியின் அடிப்படையில் அனைவரும் சமத்துவ சகவாழ்வு வாழவேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் செழுமைமிக்க நோக்கம்.

இந்த அடிப்படை நோக்கத்திற்கு எதிராக, ஆண்டவனின் சன்னதியிலேயே மனிதர்களைப் பிரித்து வைக்கும் போக்கு காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து ஆலயத்தில் அனைவரும் சமம், அனைத்து சமுதாயத்தினரும் கருவறை வரை சென்று வழிபாடு நடத்தும் உரிமையுள்ளவர்கள் என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து பாடுபட்டு வருகிறது திராவிட இயக்கம். குறிப்பாக, திராவிட அரசியல் பேரியக்கமான திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் போதெல்லாம் இதற்கான அரசாணைகள், சட்டங்கள், நடைமுறைச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆதிக்கப் பிரிவினரால் இதற்குப் பல தடைகள் உருவாக்கப்பட்ட நிலையில், கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அற்புதமான திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, சிந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. அங்கே அர்ச்சகர் பணி காலியாக உள்ள 62 இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது பெருமையோடு குறிப்பிடத்தக்கது.

பழங்குடி இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என மொத்தமாக 36 பேர் அர்ச்சகராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். திருவிதாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட அனைத்துக் கோயில்களிலும் இனி இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும், பொதுப்பட்டியலின் வழியாகவும் தகுதி வாய்ந்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மற்ற கோயில்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற அங்கே ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியன.

திராவிட இயக்கம் வழங்கிய அருங்கொடைகளில் ஒன்றான சமூக நீதி செயல்பாடுகளில் முன்னோடியான தமிழகம் ஒரு நூற்றாண்டு காலமாக சாதி எல்லைகளைக் கடந்த வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி வருகிறது. திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே கோயில்கள் பாதுகாப்புக்கான அறநிலையத்துறைச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியாரின் சமரசமற்ற சமூக நீதிப் போராட்டங்களால் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான சட்டங்களும், திட்டங்களும் நிறைவேறின. அதன் தொடர்ச்சியாகத்தான், கோயில் கருவறையில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை அகற்றப்படவேண்டும் என்றும், அதற்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி, அதற்காக போராடி வந்தார்.

கடந்த 1970 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள், கருவறை நுழைவுப் போராட்டத்தினை தந்தை பெரியார் அறிவித்த நிலையில், அப்போது முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி, பெரியாரின் குருகுலத்தில் பயிற்சி பெற்ற தலைமாணாக்கர்களில் ஒருவர் என்பதால், பெரியாரின் உயர்ந்த நோக்கத்தை உணர்ந்து, போராட்டமோ – கிளர்ச்சியோ - வன்முறையோ தேவையின்றி, அரசாணை மூலமாகவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தார்.

தலைவர் கருணாநிதியின் உறுதிமொழி மீது நம்பிக்கை கொண்ட பெரியாரும் கருவறை நுழைவுப் போராட்டத்தை ஒத்திவைத்தார். சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதை ஆட்சியின் அடிநாதமாகக் கடைப்பிடிக்கும் தலைவர் கருணாநிதி அரசு, 1970 ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. அதன்படி, அர்ச்சகர் தொழிலுக்கு பிராமணர் அல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்ற அந்த மசோதாவை அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் கொண்டு வந்தார். 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் அந்த மசோதா ஒரு மனதாக சட்டமன்றத்தில் நிறைவேறியது. இது 08.01.1971 முதல் நடைமுறைக்கு வந்தது.

எனினும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசின் மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மத சுதந்திரம் - வழிபாட்டு உரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாக மடாதிபதிகளும், உயர்குலத்தோரும் அந்த ரிட் மனுக்களில் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி மற்றும் ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு இந்த மனுக்களை விசாரித்து, இச்சட்டம் செல்லும், அரசமைப்புச் சட்டம் 25 - 26 பிரிவுகளுக்கு முரண் அல்ல என்று தீர்ப்பு தந்தனர்.

தலைவர் கருணாநிதி அரசின் மசோதாவுக்கு ஏற்பளிக்கப்பட்டாலும், ஆகம விதிகள் மீறல் உள்ளிடட சந்தேகங்களை எழுப்பி, அர்ச்சகர் நியமனத்தில் குறைபாடுகள் இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் நீதியரசர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு முடக்கப்பட்டது. இதனைத் தந்தை பெரியார் தன் நெஞ்சில் தைத்த முள்ளாகவே கருதிய நிலையில், மறைவெய்தினார்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த அந்த முள்ளை அகற்றும் பணியில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை 15-04-1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினராக இருந்த உலகநம்பி, 'பரம்பரை அர்ச்சகர் சட்டத்தை ஒழித்து அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்' என்ற தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்.

கோயில் கருவறை வரை சமூகநீதியைக் காக்கும் வகையில் திமுக அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், 1976ஆம் ஆண்டு ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டது. பின்னர், அமைந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் நீதிபதி மகராஜன் தலைமயிலான குழு அமைக்கப்பட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு அரசியல் சாசனத்தில் உள்ள இடர்ப்பாடுகள் களையப்பட்டு, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கானப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், அனைத்து சாதியினரும் அர்ச்சராவதற்காக திருச்சி அருகே வேதாகம கல்லூரி நிறுவப்படும் என 1991ல் அறிவிக்கப்பட்டு, 1996 வரை தொடர்ந்து அறிவிப்புகளாகவே இருந்து கடைசிவரை நிறைவேற்றப்படாமலேயே போனது.

நாத்திக நெறியைக் கடைப்பிடித்தாலும், அனைத்து நிலைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையுடன், கோயில்களில் அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமையை வலியுறுத்திய பகுத்தறிவுப் பகலவன் பெரியார், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கிற சமத்துவ நெறியை வலியுறுத்திய பேரறிஞர் அண்ணா ஆகியோரை, தனது தலைவர்களாக ஏற்று, அவர்தம் வழிநடக்கும் தலைவர் கருணாநிதி, 'கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது' என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் 5வது முறையாகத் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை தலைவர் கருணாநிதி ஏற்றநிலையில், முதல் நடவடிக்கையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானத் தனிச் சட்டத்தை (Act 15 of 2006) நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, திருவண்ணாமலை, திருவரங்கம் உள்ளிட்ட இடங்களில் சைவ - வைணவ ஆகமப் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த 207 பேர், உரிய பயிற்சி பெற்று, அர்ச்சகராகும் தகுதியையும், அதற்குரிய பட்டயத்தையும் பெற்றனர்.

வரலாற்றுப் புரட்சியாக நடந்த இந்த மாற்றங்களை ஏற்க இயலாமல், ஒரு சிலர் எதிர்ப்பு காட்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்குத் தடையாணை பெற்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015 அன்று நீதியரசர் ரஞ்சன் கோகாய், நீதியரசர் ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், 'தமிழ்நாடு அரசின் (திமுக அரசின்) அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும்' என்று தெரிவித்தனர். எனினும், அத்தீர்ப்பின் பகுதி 43-ல், 'ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படிக்கான சட்டப்பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் காரணம் காட்டி, திமுக அரசின் சட்டத்தை நிறைவேற்றுவதா என்ற காழ்ப்புணர்வுடன் அதிமுக அரசு செயல்பட்டதால், பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர். இதனைக்கண்டித்து மறைந்த ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னெடுத்தப் போராட்டத்தில் திமுக பங்கெடுத்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சராக்க வலியுறுத்தியது.

அதனை அதிமுக அரசு இன்றளவும் கண்டுகொள்ளாத நிலையில்தான், அண்டை மாநிலமான கேரளாவில், தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் உள்ளிட்ட பிற சமூகங்களைச் சேர்ந்த 62 பேரை அர்ச்சகராக நியமிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் 1942 ஆம் ஆண்டு முதலே திருவிதாங்கூர் தேவசம் வாரியத்திற்குட்பட்ட கோயில்களில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வந்துள்ளது. அதற்கேற்ப, பல ஆண்டுகளுக்கு முன்பே அம்மாநிலத்தில் அதற்கான அரசாணை போடப்பட்டுள்ளது. அது தற்போது செயல்பாட்டுக்கும் வந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசாணை என்பதைக் கடந்து, தனி சட்டமே நிறைவேற்றப்பட்ட நிலையிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மனமில்லாத ஒரு அரசு இப்போதும் ஆட்சி செய்து வருவது, திராவிட கோட்பாடுகளுக்கு எதிரானதாக உள்ளது. மனிதர்களில் யாரும் பிறப்பால் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது. அனைவரும் சமமானவர்கள் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தன்மை. அதனை மறுத்து, பிறப்பின் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வு கற்பித்து, அதனை கடவுளின் பெயரால் செயல்படுத்த நினைப்பதை உண்மையான ஆன்மிக அன்பர்கள் கூட ஏற்கமாட்டார்கள்.

ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவதே சமூக நீதியாகும். அதனை நிலைநாட்ட, கேரள அரசிடமிருந்து தமிழக அரசு முற்போக்குப் பாடம் கற்று, உடனடியாகச் செயல்பட வேண்டுமென வலியுறுத்துவதுடன், மத்திய பாஜக அரசுக்குத் தொண்டூழியம் செய்வதையே தனது நிரந்தரக் கடமையாக கொண்டிருக்கும் 'குதிரை பேர' அரசு, இனியும் அலட்சியமாக செயல்பட்டால் திமுக தனது தோழமைச் சக்திகளுடன் களம் காணும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x