Published : 17 Jun 2023 05:20 AM
Last Updated : 17 Jun 2023 05:20 AM

முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்புவதா? - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: முதல்வருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் கொடுத்தார் என்று பழனிசாமி அவதூறு கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இதுதொடர்பாக அவர் மீதுவழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வெளியிட்ட காணொலியில், திமுக தலைவர் மீது பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறை வழக்கு குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தே முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார்.

கனிமொழி கைது செய்யப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின் சென்று பார்க்கவில்லையே என்று பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கனிமொழியை திகார் சிறையில் நேரில் சந்தித்தார். அப்போது டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர். அதன்பின் ஆ.ராசாவையும் சந்தித்தார்.

ஊழல் பற்றி பேச பழனிசாமிக்கு அருகதை இல்லை. ரூ.4000 கோடி டெண்டர்களை உறவினர்களுக்கு கொடுத்தவர் அவர். இந்த வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கெனவே பழனிசாமி கேட்டுக் கொண்டபடியே மாநில காவல்துறை விசாரிக்கலாம் என்ற அவரது கோரிக்கைக்கு ஆட்சேபம் இல்லை என்ற நிலையில்தான் அந்த வழக்கை திரும்ப பெற்றேன். பழனிசாமி இதனைகூட அறியாமல் பேசியிருக்கிறார்.

முதல்வருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் கொடுத்ததாகக் கூறுகிறார். இதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என சவால் விடும் பழனிசாமியே, அக்கட்சியை அழித்துவிடுவார். தன் ஆட்சிக் காலம் முழுவதும் பதற்றத்திலேயே இருந்து இப்போது இந்தத் தற்காலிகத் தலைமை பதவிக்காகப் பதற்றத்துடனேயே பணிந்து இருப்பவர்தான் பழனிசாமி.

திமுக எப்போதும் துணை நிற்கும்என்பதற்காகவே செந்தில் பாலாஜியை முதல்வர் சந்தித்தார்.‘மிஸ்டர் கிளீன்’ என்ற பெயரெடுத்தவர்தான் எங்கள் தலைவர். எங்களுக்கு பதற்றம் ஏற்படுவதற்கான தேவையே இல்லை.

அமலாக்கத் துறையின் நோக்கமே முறைகேடான முறையில் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு செல்வதாகத்தான் இருந்துள்ளது என்பதாலேயே முதல்வர் நேரில் சென்றார். இப்போதும் சட்டரீதியாகவே அமைச்சரின் சிகிச்சை மற்றும் பாதுகாப்புக்காக உயர் நீதிமன்றத்தை நாடினோம்.

நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அது தமிழக மக்களின் நலனுக்காகவே இருக்கும். தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களின் நலனையும் கருத்திற்கொண்டு குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம்.

அதற்குப் பின் பொடா, குஜராத்கலவரம் உள்ளிட்ட விஷயங்களால் அந்த ஆதரவையும் திரும்பப் பெற்றோம். எனவே, பச்சோந்தித்தனம் பழனிசாமிக்கே உள்ளது. திமுகவுக்கு இல்லை. இது கொள்கை உணர்வுமிக்க கட்சி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x