Published : 15 Oct 2017 09:18 AM
Last Updated : 15 Oct 2017 09:18 AM

சென்னை முழுவதும் கொள்ளையர்களை எளிதில் கண்டறியகண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

கொள்ளையர்களை எளிதில் கண்டறிய சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொள்ளையர்களைப் பிடிக்க நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கேமரா, பழைய குற்றவாளிகள் மாறு வேடத்தில் வந்தால் கூட கட்டுபாட்டு அறைக்கு உடனே எச்சரிக்கை செய்து விடுகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கேமராக்கள் தியாகராய நகர், பாரிமுனை, பூக்கடை, சென்டரல் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அடுத்தடுத்து திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது புதுப்பேட்டை கோமளீஸ்வரன்பேட்டை புறக்காவல் நிலையத்திலும் தற்போது இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுபாட்டு அறையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் எஸ்.மனோகரன், துணை ஆணையர் பிரவேஷ் குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர் களிடம் கூறியதாவது: சென்னை மாநகரை சிசிடிவி கேமரா கண்காணிப்பின்கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன்படி தற்போது, எழும்பூர், ஆதித்தனார் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன உதிரி பாகங்களின் விற்பனையைக் கண்காணிக்க 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து புரசைவாக்கத்தில் பல்வேறு தெருக்களில், கண்காணிக்கும் பொருட்டு 36 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் குற்றங்களைத் தடுக்கும் முயற்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட இடத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. இதுவரை கேமரா பொருத்தப்பட்ட இடத்தில் ஒரு குற்றவாளி கூட தப்பிக்கவில்லை. தீபாவளிக்காக தொடங்கப்பட்டாலும், கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் இந்த திட்டத்தை நிரந்தரமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த கட்டுபாட்டு அறை அந்தந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x