Published : 26 Oct 2017 08:05 AM
Last Updated : 26 Oct 2017 08:05 AM

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பின்போது சுண்டல் வழங்க ஏற்பாடு

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் 18 ஆயிரம் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பின்போது, சுண்டல் வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 88 லட்சத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் அடுத்த ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் 18,119 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். இவர்களில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 147 நாட்களும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 121 நாட்களும், அந்தந்த பள்ளிகளில் மாலை 4 முதல் 6 மணி வரை, ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

அப்போது, ஒவ்வொரு மாணவருக்கும் தினமும் ரூ.8 செலவில் சுண்டல் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களில், 6 வகையான சுண்டல் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளின்போது சுண்டல் வழங்க, மாநகராட்சி நிர்வாகம், கல்வித்துறைக்கு அனுமதி வழங்கி, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x