Published : 14 Oct 2017 11:01 AM
Last Updated : 14 Oct 2017 11:01 AM

கொசு உற்பத்தி கூடமாக மாறிய மதுரை நகர் பகுதி: டெங்கு அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்

மதுரையில் மார்க்கெட், பஸ் நிலையம், பள்ளிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கிவிட்டதால் கொசு உற்பத்தி கூடமாக மாறிவிட்டன.

டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 2012-ம் ஆண்டு மேலூர் டெங்கு காய்ச்சல் பாதிப்பை விட அதிகமாக இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

மதுரை நகர், புறநகர் பகுதிகளில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர் வழிந்தோட வடிகால் வசதிகள் போதுமான அளவு ஏற்படுத்தப்படவில்லை. நாட்டிலேயே தூய்மையான தலமாக சிறப்புபெற்றுள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர் புகும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

குடியிருப்பு பகுதிகள், பூங்காக்கள், கோயில்கள், பஸ்நிலையங்கள், சந்தை பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி கூடமாகவே மாறிவிட்டன. அதனால், இரவு நேரங்களில் மட்டுமில்லாது பகலிலும் கொசுக்கடி தொல்லை தாங்க முடியவில்லை. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் செல்லும் அரசு ராஜாஜி மருத்துவமனையிலேயே கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியிலிருந்து தப்பிக்க நோயாளிகளுக்கு கொசு வலை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மதுரையில் டெங்குவால் தினமும் உயிர் பலி ஏற்படுவதால் சாதாரண கொசு கடித்தாலே அது டெங்கு கொசுவாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால், மழைநீரை வெளியேற்ற போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கீழமாரட் வீதியில் அமைந்துள்ள மார்க்கெட்டில் மழைநீரோடு, கழிவுநீரும் சேர்ந்து தேங்கிக்கிடக்கிறது. காய்கறி, பழங்களின் கழிவுகளும் சேர்ந்து சுகாதாரமற்ற நிலை காணப்படுவதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். அதேபோன்று, மாநகராட்சி அலுவலகத்தின் முன் உள்ள அலங்கார நீரூற்று தொட்டியில் நாள் கணக்கில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாமல் உள்ளது. மாநகராட்சி வளாக டீக் கடைகள் அருகே கீழே போடப்படும் கப்புகள் அள்ளப்படாமல் உள்ளன. இதில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே இந்நிலை என்றால், மற்ற இடங்களின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

பூங்காக்கள், சந்தைகள், பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதுதான் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முழுமை பெறும். இதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x