Published : 25 Oct 2017 08:33 AM
Last Updated : 25 Oct 2017 08:33 AM

தமிழகம் முழுவதும் விரைவில் அமலாகிறது: 528 பேரூராட்சிகளிலும் இணையத்தில்பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறலாம் - மாடம்பாக்கத்தில் பரீட்சார்த்த முயற்சி

மாநகராட்சி, நகராட்சிகளை தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை, பேரூராட்சிகளின் நிர்வாக இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது.

அரசு அலுவலகங்களின் பணிகள், நடவடிக்கைகள் அனைத்தையும் இணையத்தில் டிஜிட்டல் எனும் மின்னணு மயமாக மாற்றுவதற்கான முயற்சிகள், பல்வேறு துறைகளில் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளன. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்று சான்றிதழ்களை வாங்கும் நடைமுறையே தற்போது உள்ளது.

இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், பயனாளிகளுக்கு வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பெறுவதற்கான நடைமுறை முதல் கட்டமாக தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.

அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் பிறப்பு, இறப்பு தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, முதல் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பேரூராட்சியில் இணையம் மூலம் சான்றிதழ் வழங்கும் திட்டம் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசின் அனைத்து துறைகளும் இணையம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது வெளிப்படையான நிர்வாகத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும். அதற்கேற்ப அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இணையத்தில் பிறப்பு, இறப்பு சான்று, கட்டிட அனுமதி, வரி செலுத்துதல் புகார் மனு போன்ற அனைத்தையும் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவிட்ட மனுக்களின் நிலையையும், இணையத்திலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனால் பணிகள் எளிமையடைவதோடு, அனைத்துத் தகவல் களையும் மக்கள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். இதற்காக சோதனை முறையில் மாடம்பாக்கம் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. இது வெற்றியடைந்தால் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x