Last Updated : 17 Oct, 2017 09:06 AM

 

Published : 17 Oct 2017 09:06 AM
Last Updated : 17 Oct 2017 09:06 AM

சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: மக்கள் கூடும் இடங்களில் ஆயுதப் படை போலீஸார் நிறுத்தம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தீவிரப்படுத்தி உள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக கவனிக்கும்படி அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சென்னை மாநகரில் உள்ள மேன்சன்கள், தங்கும் விடுதிகள் அனைத்திலும் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் அதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ‘தி இந்து’விடம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறியதாவது:

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தி.நகர், பூக்கடை, புதுப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து காவல் பிரிவு போலீஸாரும் தயார் நிலையில் உள்ளனர். ஆயுதப் பிரிவில் உள்ள 6 ஆயிரம் போலீஸாரை முக்கிய இடங்களில் நிறுத்தியுள்ளோம். மக்கள் அதிக அளவில் கூடும் கோயம்பேடு, பெருங்களத்தூர், தி.நகர், பூக்கடை, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, சென்ட்ரல் உள்ளிட்ட பல இடங்களில் ஆயுதப்படை போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் படை, போக்குவரத்து போலீஸார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, அதிரடிப்படை என அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x