Published : 12 Jun 2023 06:37 AM
Last Updated : 12 Jun 2023 06:37 AM

மருத்துவக் கலந்தாய்வு விவகாரத்தில் மாநில உரிமையை விட்டுத் தரமாட்டோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: மருத்துவக் கலந்தாய்வு விவகாரத்தில் மாநில உரிமையை விட்டுத் தரமாட்டோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள15 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்துகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.

இந்த முறையை மாற்றிவிட்டு, அனைத்து இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின்கீழ் செயல்படும் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் மூலம் பொது கலந்தாய்வை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், மீண்டும் பொது கலந்தாய்வு நடத்த முடிவு செய்து மத்திய அரசு முன்மொழிவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘மத்திய சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பால், தமிழகத்தில் உள் ஒதுக்கீடு பெற்று வரும் முஸ்லிம்கள், அருந்ததியர், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத் துறையிடம் நேரில் எடுத்துரைக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மருத்துவக் கலந்தாய்வை நடத்தும் விவகாரத்தில் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x