Published : 05 Oct 2017 08:37 AM
Last Updated : 05 Oct 2017 08:37 AM

சின்னம், கட்சி யாருக்கு? - அதிமுக இரு அணிகளும் நாளை டெல்லியில் முகாம்

இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சி பெயரை மீட்க முதல்வர் பழனிசாமி மற்றும் தினகரன் அணியினர் நாளை டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.12-ம் தேதி நடப்பதாக இருந்து அதன்பின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போது, தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிப் பெயரை முடக்கி உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையம் கேட்டு பெற்றது. ஆனால், பிரிந்த அணிகள் சேர்ந்து, தினகரன் தலைமையில் ஒரு அணி உருவானதால், சின்னத்தை முதல்வர் பழனிசாமி தரப்பினர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிப் பெயர் தொடர்பான வழக்கில், அக்.31-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, செப்.29-ம் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

நேற்று 4-ம் தேதி இரு தரப்பும் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க அவகாசம் தரப்பட்டது. தொடர்ந்து, நாளை 6-ம் தேதி இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் செய்து வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், வி.மைத்ரேயன் எம்பி., நிர்வாகிகள் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன், எம்எல்ஏ இன்பதுரை ஆகியோர் இதற்காக இன்று இரவு டெல்லி செல்ல இருப்பதாக தெரிகிறது.

மேலும், ஜெயலலிதா மறைந்த போது அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல், அவர்கள் ஆதரவு கடிதம் உள்ளிட்டவை மற்றும் கட்சி விதிகளில் மாற்றம், அதற்காக பெறப்பட்ட ஆதரவு உள்ளிட்ட விவரங்களையும் எழுத்துப்பூர்வமாகவும், நேரிலும் எடுத்துரைக்கின்றனர். அதேபோல், தினகரன் தரப்பில், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தலைமையில், அக்கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x