Published : 17 Oct 2017 09:03 AM
Last Updated : 17 Oct 2017 09:03 AM

சட்டக் கல்வி ஆவணங்கள் திடீர் மாயம்: 42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்

தமிழ்நாடு பார் கவுன்சிலில் இருந்த சட்டக் கல்வி உள்ளிட்ட ஆவணங்கள் திடீர் மாயமானதால் தமிழகம் முழுவதும் 42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

வெள்ளை, கருப்பு சீருடை அணிந்து வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் குண்டர்கள் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது காவல் துறையும், அகில இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கறிஞர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய உத்தரவிட்டதும் 4 ஆயிரம் கோப்புகள் மாயமாகி விட்டதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து இருந்தார். மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் தேவைக்கு அதிகமாக சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை இருப்பதாகவும், இவ்வளவு சட்டக் கல்லூரிகள் தேவையா என்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட் டிருந்தார்.

20 சதவீதம் பேர் போலி

இதற்கிடையே, நாடு முழுவதும் 20 சதவீதத்துக்கும் மேலாக போலி வழக்கறிஞர்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக 1980-ல் பதிவு செய்த தக்கலையைச் சேர்ந்த பி.சசிக்குமரன் நாயர், 1997-ல் பதிவு செய்த சென்னையைச் சேர்ந்த அஞ்சலி நாக், 1998-ல் பதிவு செய்த கும்பகோணம் டி.ஜி.மாணிக்கம், தஞ்சாவூர் என்.சதீஷ்குமார், கோவை எம்.ரமேஷ், விழுப்புரம் செல்வராஜ், கரூர் செந்தில்குமார், தனபால், பாஸ்கரன் உள்ளிட்ட 42 வழக்கறிஞர்களின் கல்விச் சான்றிதழ்கள் திடீரென மாயமாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் இவர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் தங்களது சட்டக் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் பார் கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கவில்லை எனில் பார் கவுன்சிலில் இருந்து அவர்களின் பதிவு நீக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர், 22 உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டே நிறைவடைந்தது. தற்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பார் கவுன்சில் பொறுப்புத் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஆவணங்கள் மாயமானது தொடர்பாக பார் கவுன்சிலில் பணிபுரியும் 2 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்களிடம் விசாரணை

இதுதொடர்பாக பார் கவுன்சில் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம். தற்போது ஆவணங்கள் மாயமாகியுள்ள 42 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தையும் கோரி வருகிறாம். அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் உடந்தையாக இருந்த பார் கவுன்சில் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x