Published : 16 Oct 2017 02:46 PM
Last Updated : 16 Oct 2017 02:46 PM

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி

சென்னை ராயபுரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் பைக் ரேஸில் ஈடுபட்டார்கள். இதில் மோட்டார் சைக்கிள் மோதியதில் எதிர்த் திசையில்  நண்பருடன் மோட்டார் பைக்கில் வந்த அப்பாவி வாலிபர் பலியானார்.

சென்னையில் விடுமுறை நாட்களில் பைக் ரேஸ் செல்வது வாடிக்கையாகி வருகிறது. நாளுக்குநாள் இளைஞர்களிடையே ரேஸ் மோகம் அதிகரித்து வருவதை போலீஸார் கண்டுங்காணாமல் இருப்பதால் இளைஞர்கள் பைக் ரேஸில் இன்னும் தைரியமாகவும் முரட்டுத் தனமாகவும் ஈடுபடுகின்றனர்.

நேற்று இரவு, சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள எம்.எஸ். கோவில் தெருவில் 10 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். 200 சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகள் சீறிப்பாய்ந்து சென்றன.  இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஒதுங்கினர். வழக்கத்தை விட, தீபாவளிக்காக துணி எடுக்க எம்.சி.சாலைக்கு வந்த பொதுமக்கள் வாகன் ஓட்டிகள் இந்த ரேஸ் விபரீதம் கண்டு அச்சத்தில் உறைந்தனர்.

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் ஆர்வத்தில் கண்மண் தெரியாமல் ஓட்டினர். எதிர்ச்சாலையில் தன்  நண்பருடன் வந்துகொண்டிருந்த முகமது ரபிக் (36) என்பவரின் வாகனம் மீது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பிரதீப் (25) என்பவரது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் முகமது ரபிக் அவரது நண்பர் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்ட பிரதீப் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

காயம் அடைந்த  3 பேரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  இதில் முகமது ரபிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காசிமேடு போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x