Published : 20 Oct 2017 10:19 AM
Last Updated : 20 Oct 2017 10:19 AM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் நீர் இருப்பு ஒரு டி.எம்.சி.யை (ஆயிரம் மில்லியன் கன அடி) தாண்டியது. நேற்றைய நிலவரப்படி ஏரிகளில் 1,052 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.
சென்னைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. போதிய மழை இல்லாததால் இந்த ஏரிகள் வறண்டன. ஆந்திராவிலும் போதிய மழை இல்லாததால் அங்குள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பது ஒரு மாதம் நிறுத்தப்பட்டது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக விவசாயக் கிணறுகள், கல் குவாரிகள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.
மேற்கண்ட நான்கு ஏரிகளில் ஆகஸ்ட் 20-ம் தேதி 157 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு, அக்டோபர் 3-ம் தேதி 434 மில்லியன் கனஅடியாக அதிகரித்தது. இவ்வாறு படிப்படியாக நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று நான்கு ஏரிகளிலும் நீர் இருப்பு ஒரு டி.எம்.சி.யை (ஆயிரம் மில்லியன் கனஅடி) தாண்டியது. நேற்றைய நிலவரப்படி ஏரிகளின் நீர்இருப்பு 1,052 மில்லியன் கனஅடி.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் இதுவரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சமாளித்து வருகிறோம். இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் நீர் இருப்பு ஒரு டி.எம்.சி.யை தாண்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க இருப்பதால் சென்னைவாசிகளுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT