Published : 01 Jul 2014 09:21 AM
Last Updated : 01 Jul 2014 09:21 AM
இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 12 மாடி கட்டிடம் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளதாகவும், 2 அடிகள் கீழே இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அதன் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை போலீஸார் வெளியேற்றினர்.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதைத் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் அந்த கட்டிடத் தின் அருகில் கட்டப்பட்டுள்ள 12 மாடி கட்டிடத்தின் தரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த கட்டிடம் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளதாகவும், 2 அடிகள் கீழே இறங்கி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் வெளியேற்றினர். அங்குள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அழுகியதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இறந்தோரின் உடல்கள் அழுகியதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது
மவுலிவாக்கத்தில் இடிந்து தரைமட்டமான கட்டிடத்திலிருந்து இதுவரை 28 பேர் சடலமாகவும், 26 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 29 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இவர்களில் பலர் உயிரிழந்து இருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அழுகத் தொடங்கியதால், துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது.
துர்நாற்றத்தை போக்க கட்டிட இடிபாடுகள் மற்றும் சாலைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மீட்புக் குழுவினர் அனைவரும் முகமூடி அணிந்து கொண்டே, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவரும் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர். துர்நாற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதால், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT