Last Updated : 09 Jun, 2023 01:22 AM

 

Published : 09 Jun 2023 01:22 AM
Last Updated : 09 Jun 2023 01:22 AM

சிவகங்கை | 125 கிடாக்களுடன் 10 கி.மீ. நடைபயணம் - 5 வருடங்களுக்கு பிறகு குலத்தெய்வ வழிபாடு நடத்தும் கிராம மக்கள்

சிவகங்கையில் நரியனேந்தல் முத்தையா கோயிலில் குலத்தெய்வ வழிபாட்டுக்காக சென்ற கிராம மக்கள்.

சிவகங்கை: சிவகங்கை அருகே குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ., நடந்து சென்றனர்.

சிவகங்கை அருகேயுள்ள பெருமாள்பட்டி, இலுப்பக்குடி கிராமங்களைச் சேர்ந்த 65 பங்காளிகள், நரியனேந்தலில் உள்ள முத்தையா கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலத்தெய்வ வழிபாடு நடத்துகின்றனர். கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று சாமி கும்பிடச் சென்றனர்.

அவர்கள் 125 கிடாக்களுடன் 10 கி.மீ., தூரத்தில் உள்ள கோயிலுக்கு நடந்து சென்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்ற அவர்களின் பின்னால் 65 சரக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. நேற்றிரவு கோயிலை அடைந்த அவர்கள், இன்று (ஜூன் 9) காலை கோழிகளை பலியிட்டு வழிபாட்டை தொடங்குகின்றனர். ஜூன் 10-ம் தேதி கிடா வெட்டி வழிபாடு நடத்துகின்றனர். ஜூன் 11-ம் தேதி மீண்டும் கிடா வெட்டி படையலிடுகின்றனர். பின்னர் அன்று மாலை வாகனங்களில் ஊருக்கு திரும்புகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்களில் ஒருவரான ராமசாமி என்பவர் கூறியதாவது: கடந்த காலங்களில் குழந்தைகள், சாமான்களை ஏற்றிச் செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்தினோம். தற்போது சரக்கு வாகனங்களை பயன்படுத்துகிறோம். கரோனாவால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சாமி கும்பிடுகிறோம். மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x