Published : 09 Oct 2017 11:39 AM
Last Updated : 09 Oct 2017 11:39 AM

சைதாப்பேட்டையில் பெண்ணிடம் நகை பறித்த நபர் கைது: 4 பவுன் நகை மீட்பு

சைதாப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட நந்தனம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தங்க நகையை பறித்துச்சென்ற வழக்கில் ஒருவர் சிக்கினார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை, சைதாப்பேட்டை, சின்னையா கார்டன் பகுதியில் வசிப்பபவர் சசிகலா(31). இவர் கடந்த மாதம் 30-ம் தேதி இரவு 8.00 மணியளவில் அண்ணாசாலை, நந்தனம் பள்ளிவாசல் அருகே நடந்து சென்றபோது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சசிகலா கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் எடையுள்ள தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.

இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சசிகலா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.

போலீஸார் விசாரணையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டை, ரங்கூன் தெரு மணிகண்டன் (எ) கேரட் மணி(22) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 4 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்படி செயின் பறிப்பு சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் போலீஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் (எ) கேரட் மணி மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் செயின்பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மணிகண்டன் (எ) கேரட் மணி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x