Published : 31 Oct 2017 09:55 AM
Last Updated : 31 Oct 2017 09:55 AM

விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி தகவல்: ஜெ.மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் - பதில் கிடைத்த பின்னர் விசாரணை தொடங்கும்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பதில் அளித்த பிறகு விசாரணை தொடங்கும் என்றும் விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்.22-ல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிச.5-ம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. விசாரணை அறை எப்படி இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிபதி ஆறுமுகசாமி சில ஆலோசனைகளை கூறினார். அதன்படி, விசாரணை அறைக்குள் நடக்கும் உரையாடல்கள் வெளியில் கேட்காத அளவுக்கு, திரையரங்குகளில் உள்ள கட்டமைப்புபோல அறை வடிவமைக்கப்பட்டுளளது. பொதுப்பணித்துறையின் கீழ் இந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி கோவைக்கு வந்தார். அவரை நேற்று காலை செய்தியாளர்கள் சந்திக்க முற்பட்டனர். எனினும், துக்க நிகழ்வில் பங்கேற்க வந்துள்ளதால் பேட்டி எதுவும் தர முடியாது என்றும், வீடியோ எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பதில் அளித்த பின்னரே, அடுத்தகட்ட விசாரணை தொடங்கும்' என்றார். யார் யாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, எப்போது விசாரணை தொடங்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. நீதிபதி ஆறுமுகசாமி, நாளை மறுநாள் (நவ. 1) சென்னை செல்கிறார். அதற்குப் பிறகு ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

20 பதிவு தபால்கள் வந்துள்ளன

15 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில், ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் அறிந்தவர்கள் தபால் மூலமும் தகவல்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று மாலை வரை கலச மஹால் முகவரிக்கு சுமார் 20 பதிவு தபால்கள் வந்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x