Published : 07 Oct 2017 09:13 AM
Last Updated : 07 Oct 2017 09:13 AM

ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் கோவை இளைஞருக்கு தொடர்பு?

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். இயக்கத்துக்கு, தென்னிந்தியாவில் இருந்து ஆட்களை சேர்க்க முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, கேரள மாநிலம் கண்ணூரில் 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதில் கோவையைச் சேர்ந்த அபுபஷர் (எ) ரஷீத்தும் ஒருவர். அவர் அளித்த தகவலின்பேரில், நெல்லை, சென்னையைச் சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம், தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து ஐ.என்.ஏ. அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘மேட்டுப்பாளையம் டீச்சர்ஸ் காலனி ரங்கராஜா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் அமீர் (26). மேட்டுப்பாளையத்தில் செல் போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் விற்பனை செய்யப்பட்ட சிம் கார்டு, ஐ.எஸ். இயக்க ஆதரவாளரால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அமீரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x