Published : 23 Oct 2017 09:42 AM
Last Updated : 23 Oct 2017 09:42 AM

கழிவுகள், குப்பைகள் தேங்கி துர்நாற்றம்: பிராட்வே பேருந்து நிலையத்தால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்; தினமும் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்

சென்னையில் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே குப்பைகள் குவிந்து, சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. இதனால், இங்கு வரும் பயணிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 765 வழித்தடங்களில் தினமும் 3652 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

சென்னையில் முக்கிய மையமாக இருக்கும் பிராட்வே பேருந்து நிலையத்தை தினமும் 1.5 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆனால், குடிநீர், இருக்கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. சுகாதாரமற்ற நிலையில் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

பல் அடுக்கு வாகன நிறுத்தம்

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘சென்னையில் பாரிமுனை பெரிய வர்த்தக மையமாக திகழ்கிறது. இங்குள்ள பிராட்வே பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு, பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த 2003-ல் அறிவித்தது. ஆனால், இன்று வரையில் அந்தத் திட்டம் கிடப்பில்தான் உள்ளது. எனவே, பிராட்வே மட்டுமல்லாமல், மாநகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சென்னையில் 50-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் எங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நிதி நெருக்கடியால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஆனால், பெரும்பாலான பேருந்து நிலையங்களைச் சீரமைக்க சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளோம். பேருந்து நிலையங்களைச் சீரமைக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. எனவே, சென்னை மாநகராட்சி படிப்படி யாக பேருந்து நிலையங்களைச் சீரமைக் கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x