Published : 02 Jun 2023 04:35 AM
Last Updated : 02 Jun 2023 04:35 AM

உயர்கல்வியில் விளையாட்டு பிரிவு இடஒதுக்கீட்டை உயர்த்த உத்தரவிட முடியாது - வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்கான இடஒதுக்கீட்டை உயர்த்த உத்தரவிட முடியாது என தெரிவித்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

சேலம் மாவட்ட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல பள்ளி மாணவர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்து பள்ளி பருவத்தில் இருந்தே கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அம்மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய வகையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

தற்போது, மருத்துவப் படிப்பில் 7 இடங்களும், 3 ஆண்டுகள் சட்டப்படிப்பில் 6 இடங்களும், 5 ஆண்டுகள் சட்டப்படிப்பில் 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப விளையாட்டு பிரிவில் இடஒதுக்கீட்டு எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக மனுதாரருக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, “விளையாட்டு வீரர்களுக்கு உயர் கல்வியில் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x