

செவிலியர்கள் போராட்டம்
படம்: என்.ராஜேஷ்
சென்னை: “முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும். அரசின் முடிவினை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்” என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தை முடித்துவைத்து வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேற்காணும் செவிலியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஒப்பந்த செவிலியர் சங்கங்களுடன் 19.12.2025 மற்றும் 22.12.2025 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செவிலியர்களின் போராட்டம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையின் பேரில் மீண்டும் இன்று 24.12.2025 ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யும்பொருட்டு, நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் விரைவில் நிரந்தர பணியிடங்களில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
கடந்தகால ஆட்சியில் 2015-ஆம் ஆண்டு பணிநியமனம் பெற்ற 6,395 ஒப்பந்த செவிலியர்களில், 1,871 செவிலியர்கள் மட்டுமே 2020-ஆம் ஆண்டு வரை பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தி.மு.க. ஆட்சி பதவியேற்ற 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்கரை வருடங்களில் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு (2024) மட்டும் மொத்தம் 1,693 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒப்பந்த செவிலியர்கள் பணியில் சேரும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணிபுரிந்து, அதன் பின்னர் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கேற்ப அவர்கள் நிரந்தரப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்ற விவரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், இவ்வரசு பதவியேற்றதிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அதாவது, காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாது, அவ்வப்போது புதிய பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு, அதன் மூலம் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
இவைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் செவிலியர் பணியிடத்திலிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை – 2 இடத்திற்கு 1,998 செவிலியர்களும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை – 2 பணியிடத்திலிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை – 1 பணியிடத்திற்கு 465 நபர்களுக்கும், செவிலியர் பணியிடத்திலிருந்து செவிலியர் போதகர் நிலை – 2 பணியிடத்திற்கு 62 நபர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செவிலியர்களின் நலனில் இவ்வரசு மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களின் நலன் கருதி, கீழ்க்காணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது, செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதால், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. ஆயினும் மகளிர் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு, ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு ஒன்றிய அரசின் மகப்பேறு சட்டம், 1961-இன் படி ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தேசிய நலவாழ்வுக் குழும் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.
கரோனா காலத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 செவிலியர்களில் பணியில் சேராத 390 பேர் நீங்கலாக, 2146 செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு, தற்போது பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 724 செவிலியர்களுக்கும் விரைவில் பணி நியமனம் வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இவ்வரசு பொறுப்பேற்றவுடன், ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் ரூ.14,000/-லிருந்து ரூ.18,000/- ஆக மே-2021 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூதிய உயர்வு ஒருசில ஒப்பந்த செவிலியர்களுக்கு சில நிர்வாக காரணங்களால் பெற இயலாமல் உள்ளனர் என அறிய வருகிறது. அவர்களுக்கு விரைவில் இவ்வூதிய உயர்வுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைளின் காரணமாக ஒப்பந்த செவிலியர்கள் அரசின் முதற்கட்டமாக 1000 நிரந்தர பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் முடிவினை ஏற்று, தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள்’ என அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.