Last Updated : 26 May, 2014 02:46 PM

 

Published : 26 May 2014 02:46 PM
Last Updated : 26 May 2014 02:46 PM

செல்லமே செல்லம்

செல்லப் பிராணிகள் மீது கொள்ளைப் பிரியம் காட்டுவது துள்ளும் இளமையின் குணங்களில் ஒன்று. இசை, நட்பு, விளையாட்டு, சினிமா ஆகியவற்றையும் மீறிச் செல்லப் பிராணிகளுக்கு இளைஞர்களின் மனதில் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. இளைஞர்களின் விளையாட்டு உணர்வோடும் இன்னும் கலப்படமாகாத அன்புணர்வோடும் தொடர்புடையது அவர்களின் செல்லப் பிராணிகள் மீதான நேசம். தங்கள் வீட்டுச் செல்லங்களைப் பற்றிக் கேட்டபோது உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டனர் இவர்கள்.

வினோத், திருச்சி

என்னால் ஒரு செல்லப் பிராணியைப் பற்றி மட்டும் தனியே சொல்ல முடியாது. ஏனென்றால் என்னிடம் ஒரு செல்லப் பிராணிக் கூட்டமே இருக்கிறது. நாய், பூனை, முயல், கிளி, வெள்ளெலி என ஒரு குட்டிப் பண்ணையையே வீட்டில் வைத்திருக்கிறேன். இவற்றில் இப்போதைக்கு நான் அதிகம் நேரம் செலவிடுவது ‘சிக்கு’ வெள்ளெலியுடன்தான். சிக்குவின் நுண்ணறிவுத் திறமை பல முறை என்னைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அதோடு நான் வளர்க்கும் பறவைகளைக் கூண்டில் அடைத்து வைப்பதில்லை. அவை சுதந்திரமாக எங்கே பறந்து சென்றாலும் மறுபடியும் என்னிடம் திரும்பி வந்துவிடும். பறவைகளுக்குப் பிறந்தது முதல் பயிற்சி அளித்தால் இதைச் சாத்தியப்படுத்தலாம். பறவைகளுக்கு மிளகாய் சாப்பிடக் கொடுத்தால் பேசவைத்து விடலாம் என்பதெல்லாம் கட்டுக்கதை. பறவைகளுடன் தொடர்ந்து பேசி வந்தாலே அவை உங்களுக்குப் பதிலளிக்க ஆரம்பித்துவிடும்.

திவ்ய பாரதி, சென்னை

எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது என் மோஜோவின் சிறப்பு. இப்போது கல்லூரி விடுமுறை என்பதால் மோஜோவுடன் விளையாட அதிக நேரம் கிடைக்கிறது. மிகத் திறமையாகப் பந்து விளையாடும் மோஜோ, எனக்கும் என் தங்கைக்கும் கடுமையான போட்டியை உருவாக்கும். மோஜோவுடன் இருக்கும்போது எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வேன்.

வெளியில் அலைந்து திரிந்துவிட்டு வரும்போது ஆசையுடன் வாலைக் குழைத்து வரும் நாயின் தலையைத் தடவிக் கொடுப்பதும், அது பதிலுக்கு அன்புடன் மேலே விழுந்து புரள்வதும் அன்பின் வெளிப்பாடன்றி வேறென்ன? நாய், பூனை, கிளி என விதவிதமான செல்லப் பிராணிகளை வளர்க்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது அன்பெனும் ஊற்று வற்றாமல் சுரந்துகொண்டேயிருப்பது தெரிகிறது.

சாய்ராம், சென்னை

என் பால்கனிக்கு வந்த ஒரு பூனைக்குட்டிக்கு ஒரே ஒரு முறை பால் வைத்தேன். அதற்குப் பிறகு அது என்னைப் பார்ப்பதற்குத் தினம் வர ஆரம்பித்துவிட்டது. பிறகு சில்வர் என்று பெயர் வைத்து அதை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன். பாடல்களைக் கேட்டு சில்வர் நடனமாடுவதை ரசிப்பது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. அத்துடன் பசிக்கும்போது வீட்டில் இருக்கும் மீன் தொட்டியைச் சுற்றி வருவது பயங்கர தமாஷாக இருக்கும். தினமும் காலை 5 மணிக்குத் தவறாமல் சில்வர்தான் எழுப்பிவிடும்.

சுனைனா, கொச்சி

எந்தவித நிபந்தனைகளுமின்றி நம்மிடம் அன்பு காட்டுபவை செல்லப் பிராணிகள். என் விக்கியும் அப்படித்தான். எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல், விக்கியின் குறும்பு விளையாட்டுகள் எங்கள் வீட்டில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டில் வளரும் விக்கிதான் எனக்கு சிறந்த நண்பன். இப்போது பெங்களூரில் படித்துக்கொண்டிருப்பதால் விக்கியை ரொம்ப மிஸ் பண்றேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x