Published : 16 Apr 2019 09:38 AM
Last Updated : 16 Apr 2019 09:38 AM
மத்திய அரசின் மகாரத்னா அந்தஸ்து முன்னணிப் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று எண்ணெய், இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.). இந்நிறுவனம் பொறியாளர் பதவியில் (Executive-Engineering) 785 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் எனப் பல்வேறு இன்ஜினீயரிங் பிரிவுகளில் இக்காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.
வயது 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் எனில் 35 வரையும், ஓ.பி.சி. என்றால் 33 வரையும் வயது வரம்பு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் 2019 ‘கேட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண், பொறியியல் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் வேலைக்கு தேர்வுசெய்யப்படுவர்.
தேர்வுமுறை
தேர்வுக்கு மொத்தம் 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், கேட் நுழைவுத் தேர்வுக்கு 60 மதிப்பெண், கல்வித் தகுதிக்கு 20 மதிப்பெண் (பி.எச்டி. முடித்திருந்தால் கூடுதலாக 5 மதிப்பெண்), நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண் என அடிப்படையில் வெயிட்டேஜ் அளிக்கப்படும். பொறியாளர் பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் ஆரம்ப நிலையிலேயே ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியுடைய பொறியியல் பட்டதாரிகள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இணையதளத்தைப் (www.ongcindia.com) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்குத் தேர்வுசெய்யப்படுவோரின் பட்டியல் மே மாதம் முதல் வாரம் இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்முகத் தேர்வை ஜூன் 10-ம் தேதி நடத்த ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்
கடைசி நாள்: 25 ஏப்ரல் 2019
நேர்முகத் தேர்வு: 10 ஜூன் 2019.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT