

சரியாக 62 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் என்கிற பரந்து விரிந்த மாவட்டத்திலிருந்து 1965இல் தர்மபுரி மாவட்டம் பிறந்தது. பிறகு 97இல் நாமக்கல், 2004இல் கிருஷ்ணகிரி. கடைக்குட்டியான கிருஷ்ணகிரிக்குப் பல ஊர்கள், வரலாற்றுரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிறப்புச் சேர்க்கின்றன.
அவற்றில் ஓசூர் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் தொழில் நகரமாகப் புகழ்பெற்றுவிட்டது. அந்த ஓசூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கிறது.
அதைவிட முக்கியமாக வெயிலோடு விளையாடும் வட தமிழகத்துக்குத் தன்னுடைய குளிரின் கொடையால் மலையூர் என்கிற இதமான மதிப்பைக் கொடுத்திருக்கிறது. கோடை வந்தால் நீலகிரி, கொடைக்கானல், ஏலகிரி, மேகமலைக்குச் செல்ல நினைக்கும் யாரும் ‘தளி’யைப் பற்றி நினைத்தே பார்ப்பதில்லை.
ஆனால், தளியின் குளிர்க் கொடையை அனுபவித்த ஆங்கிலே யர்கள் அதை, ‘குட்டி இங்கிலாந்து’ (Little England) என்று தங்கள் நாள்குறிப்பில் காதலுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கோட்டையும் ரோஜா தோட்டமும்
ஆங்கிலேயர்கள் தங்களின் கோடை வாழிடங்களாக ஊட்டி, கொடைக்கானல் ஆகிய ஊர்களில் கட்டிடங்களை எழுப்பி அங்குள்ள தட்ப வெப்பத் தில் லயித்திருந்தாலும் ‘தளி’ அவர்களுக்குக் கொடுத்த உணர்வேதனி.