

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீர்குலைந்தது. இதன் காரணமாக எரிசக்தி விநியோக தடைகளால் உலக பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், யூனிகிரெடிட் (UniCredit) நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனம் (The Investment Institute), 'ஹார்முஸ் ஜலசந்தி அதிர்ச்சி' (The Strait of Hormuz shock) என்ற தலைப்பில் காலாண்டு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் ஆகியவை குறித்து சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் தேவையான முக்கியமான கணிப்புகளை இந்த அறிக்கை வழங்குகிறது.
யூனிகிரெடிட் ஆய்வறிக்கையின்படி, ஈரானுடனான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி தற்காலிகமாக மூடப்பட்டதால் உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளன. பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்ற நாடுகளை விட வலுவான நிலையில் இருக்கும்.
இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி சுமார் 2% ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பாவின் நிலைமை வேறுபட்டது. அங்கு வளர்ச்சி வெறும் 0.8% மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பணவீக்கம் 3%-க்கும் அதிகமாக உயரும் என்பதால், ஐரோப்பிய மத்திய வங்கி ஜூன், செப்டம்பர் மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி குறைப்பு நடவடிக்கையை 2026-ன் கடைசி காலாண்டு வரை தள்ளிப் போடலாம் எனத் தெரிகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் மிக முக்கியமான பாதை. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 34%, அதாவது தினசரி 1.5 கோடி பேரல்கள், இந்தப் பாதை வழியாகவே கடந்து செல்கிறது.
இதில் 90% சீனா மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்குச் செல்கிறது. சீனாவும் இந்தியாவும் சேர்ந்து ஏற்றுமதியில் 44% பங்கு வகிக்கின்றன; ஐரோப்பாவுக்கு வெறும் 4% மட்டுமே செல்கிறது.
இந்த ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு 50 லட்சம் பேரல்கள் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளும், மொத்த LNG-யில் 20% இயற்கை எரிவாயுவும் கடந்து செல்கின்றன. ஐரோப்பாவுக்கு நேரடி தாக்கம் குறைவாக இருந்தாலும், விநியோகத் தடை ஏற்படும்போது உலகளாவிய விலை உயர்வு தவிர்க்க இயலாதது.
ஈரானுடனான மோதலால் இந்தப் பாதை முடங்கியதால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியதோடு, எரிவாயு விலைகளும் 70% வரை அதிகரித்துள்ளன.
எரிசக்தி இறக்குமதியை அதிகமாக நம்பியிருக்கும் ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஜெர்மனியின் ரசாயன மற்றும் வாகன உற்பத்தித் துறைகள் கடும் அழுத்தத்தை சந்திக்கின்றன. சீனா மட்டும், உள்நாட்டு நிலக்கரியை நம்பியிருப்பதால், இந்த அதிர்ச்சியிலிருந்து ஓரளவுக்குத் தப்பிக்கிறது.
மோதல் நீடித்தால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலராகவும், எரிவாயு விலை மெகாவாட் மணிக்கு 118 டாலராகவும் ($118/MWh) உயரக்கூடும். பணவீக்கம் 5% தாண்டும் என்பதால், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
இத்தாலி போன்ற அதிக கடனில் உள்ள நாடுகளின் கடன் மதிப்பீடு குறையும் என்ற அச்சமும், தனியார் கடன் சந்தைகளில் பணப்புழக்கம் தடைபடும் வாய்ப்பும் நிலவுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், இந்த நெருக்கடி நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையான சவாலை எதிர்கொள்ள நேரிடும். இத்தனை சவால்கள் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், யூனிகிரெடிட் ஆய்வறிக்கை சில முக்கியமான நம்பிக்கையூட்டும் அம்சங்களை நமக்கு முன் வைக்கிறது.
மீட்சி வாய்ப்பு
ஈரான் மோதல் இந்த கோடைகாலத்துக்குள் முடிவுக்கு வரும் என்று அடிப்படை கணிப்புகள் சொல்கின்றன. அப்படி நடந்தால், எரிசக்தி விலை படிப்படியாகக் குறையும். 2026-ன் இறுதிக்குள் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலராக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகப் பொருளாதாரத்துக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
தொழில்நுட்ப உத்வேகம்
செயற்கை நுண்ணறிவு துறையில் இன்று நடக்கும் மாபெரும் முதலீடுகளும் தொழில்நுட்ப மாற்றங்களும் உலகப் பொருளாதாரத்துக்கு புதிய வலிமையைத் தரும். இந்த வளர்ச்சி குறிப்பாக இந்தியா உட்பட வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு மிகவும் சாதகமாக அமையும். அதாவது, புவிசார் அரசியல் நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்பத் துறை உலகப் பொருளாதாரத்தை முன்னோக்கி இழுத்துச் செல்லும் சக்தியாக விளங்கும்.
வலுவான வங்கித் துறை
முந்தைய நெருக்கடிகளிலிருந்து பாடம் கற்ற ஐரோப்பிய வங்கிகள், தற்போது 14%–16% வரையிலான வலுவான மூலதன விகிதத்துடன் தயாராக உள்ளன. நிதிச் சந்தையில் அதிர்வுகள் வந்தாலும், வங்கித் துறை அதைத் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. இதனால், 2008-ல் நடந்தது போன்ற பெரும் நிதிச் சரிவு இம்முறை தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு
தற்போதைய நெருக்கடி தற்காலிகமானது என்று முதலீட்டாளர்கள் உணரும்போது, அவர்களின் பார்வை 2027-ன் வளர்ச்சியை நோக்கித் திரும்பும். அப்போது சந்தைகளில் மீண்டும் நிலைத்தன்மை வரும்.
இறுதியாக, யூனிகிரெடிட் நிறுவனத்தின் தெளிவான செய்தி என்னவென்றால் தற்போதைய புவிசார் அரசியல் சிக்கல்கள் நிரந்தரமானவை அல்ல, தற்காலிகமானவையே. வலுவான பொருளாதாரக் கட்டமைப்பும், தொழில்நுட்ப வளர்ச்சியும், கட்டுக்கோப்பான வங்கித் துறையும் இணைந்து உலகை இந்த நெருக்கடியிலிருந்து கரை சேர்க்கும்.
தற்காலிக போர் நிறுத்தம்
இரண்டு வாரங்களுக்கான போர் நிறுத்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை அமலில் இருக்கும். இதற்கிடையில் நிரந்தரமான போர் நிறுத்தத்துக்கு பல்வேறு நாடுகளும் சமரச ஒப்பந்தத்துக்கு முயற்சி செய்து வருகின்றன என்ற செய்தி உலக பொருளாதாரத்துக்கு ஒரு நேர்மறையான திருப்புமுனை.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து படிப்படியாக மீண்டு வரும் என்ற நம்பிக்கை வலுப்படுகிறது. யூனிகிரெடிட் அறிக்கை கணித்தபடியே, ஆண்டின் இரண்டாம் பாதியில் விநியோகச் சங்கிலி சீரடையும் வாய்ப்பு இப்போது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இருப்பினும், இது நிரந்தர அமைதியா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். 2027-ல் உலகம் மீண்டும் ஒரு நிலையான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்பதே இந்த ஆய்வறிக்கையின் உறுதியான நம்பிக்கை!
- somasmen@gmail.com