

நான்காவது தொழில் புரட்சியின் அச்சாணிகளாக ரோபோக்களும், செயற்கை நுண்ணறிவும் (AI) விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரக் கொள்கைகளில் ஏஐ தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த `இந்தியா ஏஐ இம்பாக்ட் 2026' உச்சி மாநாடு, இந்தியாவின் டிஜிட்டல் அதிகாரத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. இருப்பினும், இது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்னும் எத்தகைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது விவாதத்துக்குரியதாகவே உள்ளது.
பொருளாதாரக் கனவும் உச்சி மாநாட்டு முடிவுகளும்
மத்திய அமைச்சரவை 2024 மார்ச் மாதம் ₹10,371.92 கோடி மதிப்பீட்டில் ‘இந்தியா ஏஐ மிஷன்’ திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த உச்சி மாநாட்டில், 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 500 முதல் 600 பில்லியன் டாலர்களை ஏஐ தொழில்நுட்பம் கூடுதலாகச் சேர்க்கும் என்ற நிதி ஆயோக்கின் இலக்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
மாநாட்டின் முக்கிய முடிவாக, `AI for All' (அனைவருக்குமான ஏஐ) என்ற இலக்கின் கீழ், இந்திய மொழிகளுக்கான பிரத்யேக ஏஐ மாதிரிகளை (பாஷினி போன்ற திட்டங்கள்) உருவாக்கவும், விவசாயம் மற்றும் சுகாதாரத் துறையில் ஏஐ பயன்பாட்டை அதிகரிக்கவும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் 'பனிப்போர்': மாநாட்டில் சலசலப்பு
இந்த உச்சி மாநாடு இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை விதைத்தாலும், இறுதி நாளில் நடந்த ஒரு சம்பவம் உலக அளவில் ஏஐ நிறுவனங்களுக்கு இடையே நிலவும் பனிப்போரை மேடையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் குழுப் புகைப்படம் எடுக்க மேடைக்கு வந்தனர். அப்போது உலக நாடுகளின் ஏஐ ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், அனைவரும் கைகோர்த்து கரங்களை உயர்த்திப் பிடிக்க பிரதமர் மோடி சைகை காட்டினார்.
பிரதமரின் ஒரு பக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையும், மறுபக்கத்தில் `ஓபன் ஏஐ' நிறுவனத் தலைவர் சாம் ஆல்ட்மேனும் நின்றனர். சாம் ஆல்ட்மேனுக்கு அருகிலேயே அவரது பரம போட்டியாளரான `ஆந்த்ரோபிக்' நிறுவனத் தலைவர் டாரியோ அமோடி நின்றிருந்தார். அனைவரும் கைகோர்த்த நிலையில், ஆல்ட்மேனும் அமோடியும் மட்டும் கைகோர்க்க மறுத்து, கைகளைத் தனியாக உயர்த்தி, முஷ்டியை மடக்கியபடி போஸ் கொடுத்தனர்.