

இந்தியப் பங்குச் சந்தையின் பிம்பம் வேகமாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் அனுபவமிக்க மூத்த முதலீட்டாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்தத் துறையில், இன்று 20 வயதைக் கடந்த இளம் தலைமுறையினர் (ஜென் ஸீ) அதிக அளவில் கால்பதித்து வருகின்றனர்.
ஆனால், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இவர்கள் எடுக்கும் பேராபத்து நிறைந்த முடிவுகள், பெரும் நிதி இழப்பிலேயே முடிவடைகின்றன என்பது புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வருகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் 30 வயதுக்குட்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிப்புகளை விட மிக வேகமாகக் அதிகரித்து வருகிறது.
37.9% பங்களிப்பு: இந்தியாவின் மொத்த முதலீட்டாளர்களில் 30 வயதுக்குட்பட்டவர்களின் பங்கு தற்போது 37.9% ஆக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இது வெறும் 23.5% ஆக மட்டுமே இருந்தது.
அதேநேரம், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தரவுகளின்படி, இந்திய முதலீட்டாளர்களின் சராசரி வயது 2020-ல் 38-ஆக இருந்தது, இது தற்போது 33-ஆக குறைந்துள்ளது.
டிமேட் கணக்குகள் அதிகரிப்பு: நாட்டின் மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 23 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் புதிதாகத் தொடங்கப்படும் 4-ல் 3 கணக்குகள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடையதே என்கிறது புள்ளிவிவரம்.