

அரச மரத்தில் குக்குறுவான்
சில ஆண்டுகளுக்கு முன் வீட்டிற்கு அருகில் ஓர் அரசஞ் செடி முளைத்தெழுந்தது. ஏதோவொரு பறவை எங்கிருந்தோ கொண்டுவந்து பரப்பிய விதைபோலும்.
வீட்டிற்கு மிக அருகில் இருந்தால் மரம் பெரிதாகும்போது வேர்களால் கட்டிடத்துக்குப் பாதிப்பு வரும் என்பதால், அதைப் பிடுங்கிச் சற்றுத் தொலைவில் நட்டுவைத்தோம்.
மரங்களில் அரசனைப் போன்று அது மிகப் பெரிதாக வளர்ந்து பரந்த இடத்தில் கிளை பரப்பிப் பல்லுயிர்களுக்கும் புகலிடமாக உள்ளது. அது பூக்கும் பருவத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளவிகள், தேனீக்கள் போன்றவற்றின் ரீங்காரம் மிக அதிகமாக இருக்கும். தேன்சிட்டு, சின்னான், நாகணவாய் (மைனா), புறா, மரங்கொத்தி, பலவகைத் தும்பிகள் எனப் பல உயிரினங்கள் அங்கு உறையும்.
மாங்குயில்
அரச மரத்தில் இயற்கை நிகழ்த்தும் ஆட்டமும் தாளமும் நிகரில்லா அழகு. வேனிற் காலத்தில் வெயில் மிகவும் வாட்டிய நேரம். பரந்து விரிந்த அரச மர நிழல் என்னைப் பரிவுடன் அணைத்தது. நீண்ட நேரம் அதன் நிழலில் அமர்ந்திருந்தேன்.
அதன் இலைக் காம்புகள் நீண்டிருக்கும். சிறு காற்றில் அந்த இலைகள் பலவாறு அசைந்தாடும். அவை சுழன்றும் ஒன்றை மற்றொன்று உரசிக்கொண்டும் இடமும் வலமும் எட்டியும் கொட்டியும் சீராகத் தாளமிட்டன. காம்பு மிகவும் நீண்ட இலைகள் தூளி ஆடுவதுபோல் ஆடின.
ஆட்டமும் தாளமும் அயர்வைப் போக்கின. புதிய இலைகள் சிவப்பாகவும் பழைய இலைகள் பசுமை வண்ணத்திலும் கலந்திருப்பது மிக அழகு.
மாங்குயில் பல ஆண்டுகளாக இங்கு வலசை வந்துகொண்டுள்ளது. மாங்குயிலின் குரல் மிக இனிமையாக இருக்கும்.